தமிழகத்தை சீரழித்துவரும் மதுவை ஒழித்து இளையதலைமுறையினரைக் காக்க "மதுவிலக்கு, அதுவே எங்களது இலக்கு" என்ற தாரக மந்திரத்தோடு எங்களது பொதுச்செயலாளர் வைகோ போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதில் ஒன்று மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
இளைஞரணி, மாணவரணி மற்றும் தொண்டரணி என அனைத்து அணிகளிலிருந்தும் ஆட்களைத் தேர்வு செய்து 1200 பேர் கொண்ட குழுவாக அமைத்து அவர்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுத்து நடைப்பயணத்துக்கு தயார் செய்தோம். இவை அனைத்திலும் வைகோ கலந்து கொண்டு இளையதலைமுறையினரை ஊக்கப்படுத்தினார்.
எங்களது பொதுச்செயலாளர் பொடா சிறையிலிருந்து வெளிவந்தவுடன் குமரியிலிருந்து சென்னை கடற்கரை வரை மேற்கொண்ட 42 நாட்கள் நடைப்பயணத்தின் போதும் மதுவிலக்கு ஒரு பிரச்சாரமாக இருந்தது. அன்று மதுவின் கொடுமை இன்றுபோல் இல்லை, இன்று நடக்கும் ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னும் மது ஒழிந்திருக்கிறது. ஆகவே மது ஒழிப்பு என்ற வேள்வியில் முழுமூச்சோடு வைகோ களத்தில் இறங்கினார். அவருக்கு உறுதுணையாக கட்சித் தொண்டர்களான நாங்கள் இருக்கிறோம்.
எங்களின் முதல் கட்ட நடைப்பயணம் டிசம்பர் 12ம் தேதி, 2012ம் வருடம் உவரியில் தொடங்கியது. எங்களின் போர்ப்படைத் தளபதியான வைகோ மொத்தப் படையை முன்னின்று நடத்திச் செல்ல, மாநில இளைஞரணிச் செயலாளரான நான் இளைஞரணிப் படையை ஒழுங்குபடுத்தி நடத்திச் சென்றேன். டிசம்பர் 25ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டத்தொடு எங்களது நடைப்பயணம் முடிவுற்றது.
எங்களின் இரண்டாம் கட்ட மதுவிலக்கு நடைப்பயணம் பிப்ரவரி 18ல் 2013ம் வருடம் கோவளத்தில் தொடங்கியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த மண்ணான காஞ்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று பிப்ரவரி 28ல் மறைமலை நகரில் முடிவுற்றது.
எங்களின் மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைப்பயணம் ஏப்ரல் 18, 2013ம் வருடம் பொள்ளாச்சியில் தொடங்கி, தந்தை பெரியார் பிறந்த பூமியான ஈரோட்டில் ஏப்ரல் 28ல் முடிவுற்றது.
No comments:
Post a Comment